கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி – த.வி.பு ஓ-3035 தகட்டிலக்கம் மீட்ப்பு.!

0
109

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான இன்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் தகடு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதிலிருந்து மூன்று உடலங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின் ஏழாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் இன்று (11.07.2024) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்ட குழுவினர் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் பொலிசார் உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றிருந்தன.

மூன்றாம் நாளாகவும் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான அலுவலகத்தின் மனித உரிமைகள் அலுவலர் செல்ரின் அகிலன் அவர்கள் அகழ்வு பணிகளை கண்காணித்தார்.

குறித்த அகழ்வு பணியின் போது ஏழு மனித உடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே எடுக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை மொத்தமாக 43 எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ ஏழாம் நாள் அகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அடையாளப் படுத்தப்பட்டுள்ள ஏழு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இன்று மூன்று எலும்புக்கூட்டு தொகுதிகள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அவ் எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து பற்கள் பிரித்து எடுக்கப்பட்டு DNA பரிசோதனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவ் எலும்புக் கூட்டுத்தொகுதிகளில் இருந்து த.வி.பு ஒ-3035 இலக்கத்தகடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here