அடுத்தடுத்து நடந்த வீதி விபத்துக்களில் 4 பேர் உயிரிழப்பு..!

0
90

நாட்டின் பல பகுதிகளில் அடுத்தடுத்து இடம்பெற்ற வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று (22) திரப்பனை, வெயங்கொடை, அஹுங்கல்ல மற்றும் மாத்தளை பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது.

ஏ-09 பிரதான வீதியின் கல்குளம் பகுதியில் வாகனம் ஒன்றில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் கெதேவ பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை தேடி திரப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, வெயங்கொடை, நைவல – உடுகம்பொல வீதியில் பங்களாவத்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று நாய் மீது மோதியதில் விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 58 வயதான ஓட்டுநர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காலி – கொழும்பு பிரதான வீதியில் அஹுங்கல்ல – நெலிகந்த சந்திக்கு அருகில் பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஓவிலிகந்த – மாத்தளை வீதியில் வெலிஹின்ன 06 ஆம் தூண் பிரதேசத்தில் பேருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாத்தளையில் இருந்து ஹல்கொல்ல நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பேருந்து தரிப்பிடம் ஒன்றில் பயணிகளை இறக்கிவிட்டு முன்நோக்கி சென்ற நிலையில், குறித்த பேருந்தில் இருந்து வீதியை கடக்க முற்பட்ட பெண் குறித்த பேருந்தின் சில்லில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்த பெண் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். மாத்தளை ஓவிலிகந்த பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here