மன்னார் துப்பாக்கிச் சூடு – 5 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியலில்..!

0
101

மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை(10-02-2025) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று புதன்கிழமை(29) உத்தரவிட்டார்.

மேலும் இன்று (29) கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சந்தேக நரை நாளை வியாழக்கிழமை 30 ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும் இன்று (29) மன்னார் நீதிமன்றத்தின் மூடிய அறைக்குள் தனித்தனியாக அடையாள ஆள் அணிவகுப்பு இடம்பெற்றது..இந்த நிலையிலே ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 16 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்தவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு,பெண் ஒருவர் உள்ளடங்களாக இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது பிரதான சந்தேக நபர்கள் உள்ளடங்களாக 5 பேரை மன்னார் பொலிஸார் கைது செய்தனர்.அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் அடங்குகின்றனர்.

குறித்த 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை (29) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர்.இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.