இன்று தைப்பூசம், ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரம் வருகிறது என்றபோதிலும் தை மாதத்தில் வருகின்ற பூச நட்சத்திரம் மிக மிக விசேஷமானது.
தைமாதமும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் முருகனை வழிபடுவதால் வாழ்வில் வறுமை நீங்கி செல்வம் நிலைக்கும் என்பது ஐதீகம். பொதுவாக பூச நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்தது.
இந்நாளில் அதிகாலை எழுந்து வீடு சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி விரதம் முழுமையடைய பிரார்த்தனை செய்ய வேண்டும். காலை முதல் மாலை வரை முருகனை நினைந்து உபவாசம் இருக்கலாம். இயலாதவர்கள் காலை பிற்பகல் இருவேளையும் பால், பழம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். மாலையில் அருகில் முருகன் கோயிலில் வழிபாடு செய்யலாம். முருகனின் தீவிர பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பர். மார்கழி தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம்.
பார்வதி , முருகனுக்கு ஞானவேல் வழங்கிய தினம் இது தான். அதனால் இந்நாளில் முருக வேலையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. அதனை கொண்டே முருகன் சூரபத்மனை வதம் புரிந்தார். நாமும் முருக வழிபாடு செய்திட நம் வாழ்வில் துயரங்களையும் வதம் செய்து நன்னருள் புரிவார் என்பது ஐதிகம். தீய சக்திகள் நம்மை அண்டாது. வறுமை நீங்கி செல்வ வளம் பெறலாம். குரு பகவானையும், சிவபெருமானையும், முருகப் பெருமானையும் வழிபடுவது கூடுதல் சிறப்பான பலன்களை தரும்.தைப்பூச திருநாளில் முருகனையும், முருகனின் வேலையும் வழிபடுவோம். அவன் தாள் பணிந்து அவன் அருள் பெறுவோம்.