யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் 05 பேர் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
கோப்பாய் மத்தியை சேர்ந்த சோதிலிங்கம் கஜேந்திரன் என்ற 30 வயதானவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் (21) நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் – கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக பயணித்த வாகனம் மோதி தள்ளி விட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தப்பிச் சென்ற வாகனத்தினை கண்காணிப்பு கெமராக்களின் ஊடாக தேடி வருகின்றனர்.