கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்சாரமூடு பகுதியில் வசித்து வருபவர் 23 வயது இளைஞர் அஃபான். இவர், தனது தாய், சகோதரர்கள், மூதாட்டி என மொத்தம் 6 பேரை சுத்தியால் அடித்துக் கொலை செய்ததாகவும், இதையடுத்து தானும் எலி மருந்து சாப்பிட்டுள்ளதாகவும் காவல் நிலையத்தில் சரண் அடைந்து பரபரப்பை கிளப்பியிருந்தார். இதனால், அதிர்ந்து போன காவலர்கள், அந்த இளைஞரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், அவர் கூறிய தகவல் உண்மை தானா என்பதை உறுதி செய்வதற்காக இளைஞரின் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது, 5 பேர் உயிரிழந்த நிலையில், சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதில், இளைஞர் அஃபானின் சகோதரர்கள், காதலி, மூதாட்டி, உறவினர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். அஃபானின் தாய் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து, அவரை உடனே மீட்டு மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் நீதிபதி நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில், அஃபானின் தந்தைக்கு வெளிநாட்டில் ரூ.70 லட்சம் கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த கடனை செலுத்த அஃபான், தனது வீட்டில் பணம் கேட்டுள்ளார். ஆனால், தனது குடும்பத்தினர் பணம் தர மறுத்ததால் 5 பேரையும் கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அஃபானின் தந்தையை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்தபோது, அவர் பணம் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே, இந்த கொலைகளுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா..? என்ற கோணத்தில் தனிப்படை அமைப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வ்ருகின்றனர். 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.