எதிர்வரும் 03 ஆம் திகதிவரை மழையுடன் கூடிய வானிலை தொடரும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் இன்று மதியம் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது…
1. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் 792 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது மேலும் மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. இதனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 03.03.2025 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3. நாளை முதல் (27.02.2025) மழை சற்று தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4. அதேவேளை உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி ஈரப்பதன் நிறைந்த காற்றை உள்ளிழுப்பதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்று வேகமாக குறிப்பாக மணிக்கு 30 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
5. இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம்.
6. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பாடசாலைகளில் தற்போது விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. ஆனால் எதிர்வரும் 03.03.2025 வரை மழையுடன் கூடிய வானிலை நிலவும் என்பதனைக் கருத்தில் கொண்டு விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்வது சிறந்தது.
7. அதேவேளை எதிர்வரும் மார்ச் மாதத்தில் கணிசமான நாட்கள் மழையுடன் கூடிய நாட்களாகவே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
8. ஆனால் எதிர்வரும் மார்ச் மாதம் 04, 06,07,08 மற்றும் 09 ம் திகதிகள் வடக்கு மாகாணத்தில் மழையற்ற நாட்களாக அல்லது மிக மிக குறைவான மழையுள்ள நாட்களாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
– நாகமுத்து பிரதீபராஜா –