மித்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடேவத்த சந்திக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மித்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மித்தெனிய, கடேவத்த சந்திக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தை, மகள் மற்றும் மகன் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மகளும் மகனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த “கஜ்ஜா” என்று அழைக்கப்படும் அருண விதானகமகே என்பவரும் அவரது பிள்ளைகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.