அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு தனியார் விடுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் அக்கரைப்பற்று பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர்.
அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், யாழ்ப்பாணம் சுண்ணாகம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும், அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய பெண் சந்தேக நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு வாளுடன் மூன்று சந்தேக நபர்களை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து 30 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு வாள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்டநடவடிக்கைக்காக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
மேலும் அன்றைய தினம் அக்கரைப்பற்று பொலிஸாரினால் 30 கிராம் 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு வாளுடன் கைதான மூவரையும் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, அக்கரைப்பற்று நீதிவான் பெண் சந்தேக நபரை விளக்கமறியலிலும், இரண்டு ஆண் சந்தேக நபர்களை 03 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் நெறிப்படுத்தலில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.