முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
சிறுமி ஒருவர் 24.02.2025 அன்றையதினம் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து வைத்திய பரிசோதனையின் போது சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருக்கின்றமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
அதனையடுத்து குறித்த சிறுமியை இளைஞன் ஒருவர் பாடசாலை வகுப்பிற்கு அழைத்து செல்வதாக கூறி பற்றைக்காட்டுக்குள் அழைத்து செல்வதாக ஆரம்பகட்ட தகவல் கிடைத்திருந்தது.
அதன் பின்னர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத், மற்றும் கிஷாளினி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பதியப்பட்டதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2ஆம் வட்டாரம், கோம்பாவில் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரும் துஸ்பிரயோகத்திற்கு உடந்தையாக இருந்ததென கூறி 19 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 11 திகதிவரை இரு இளைஞர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை இடம்பெற்று வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.