அநுராதபுரம் சம்பவம் – பெண் வைத்தியரின் சுய வாக்குமூலம்.!

0
44

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் ‘பி’ அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, சம்பவத்தை எதிர்கொண்ட வைத்தியரின் சுய வாக்குமூலத்தை பொலிஸார் நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.

“நான் என் சேவையை முடித்துக்கொண்டு, ருவான்வெலிசேயவுக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு விடுதிக்குத் திரும்பியபோது இந்த சம்பவம் நடந்தது. அவர் என்னை விடுதியின் கதவைத் திறக்கச் சொன்னார்… என் கழுத்தில் கத்தியைக் காட்டி கொலை செய்வதாக மிரட்டினார். என் மொபைல் போனிலிருந்து கடவுச்சொல்லை அகற்றச் சொன்ன நபர் மொபைல் போனில் இந்தி பாடல்களை ஒலிக்க செய்தார். அவர், ‘சத்தம் போடாதே, இல்லாவிட்டால் நீ சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுப்பேன்’ என்றார்.”

“ஒரு கட்டத்தில், நான் அந்த நபரை அவர் வைத்திருந்த கத்தியால் குத்த முயன்றேன். என் கை வெட்டப்பட்டது. நான் அவரை கத்தியால் குத்த முயன்றபோது, ​​அந்த நபர் மிகவும் கோபமடைந்தார். பின்னர் நான் கொல்லப்படுவேன் என்று பயந்தேன்.”

“சம்பவத்திற்குப் பிறகு, சந்தேக நபர் சென்றதும், ‘நான் போனை எடுத்துட்டுப் போறேன். இனிமே இது கிடைக்காது. நான் எல்லாவற்றையும் போட்டோ எடுத்துள்ளேன். யாரிடமும் சொல்லாதே. சொன்னா, உனக்குதான் பிரச்சனைதான் வரும்… மன்னிக்கவும்.”

மேலும், 10 ஆம் திகதி பிற்பகல் 3:30 மணி வரை தான் வேலை செய்ததாகவும், தனது கடமைகளை முடித்துக்கொண்டு, விடுதிக்குத் திரும்பியதாகவும், பின்னர் முச்சக்கர வண்டியில் ருவன்வெலிசேயவுக்குச் சென்று, ருவன்வெலிசேயவில் வழிபாடுகளை செய்து விட்டு, மாலை 6:30 மணியளவில் முச்சக்கர வண்டியில் விடுதிக்குத் திரும்பியதாகவும் அவர் கூறினார்.

தனது அறைக்குள் நுழைய கதவைத் திறந்தபோது, ​​தனக்குப் பின்னால் யாரோ இருப்பதை உணர்ந்ததாகவும், திரும்பிப் பார்த்தவுடன், தனது அறையின் முன் கதவில் சாய்ந்து நின்ற ஒருவர் தனது கழுத்தில் கத்தியை வைத்து, மற்றொரு கையால் தனது வாயைப் பொத்தி, கத்த வேண்டாம் என்றும், கதவைத் திறக்கச் சொன்னார், தான் பயந்து போய் கதவைத் திறந்ததும் அறைக்குள் தள்ளியதாக தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் தனது முறைப்பாட்டின் மூலம் பொலிஸாருக்கு இது குறித்து தெரிவித்ததாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரியவிடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் சந்தேக நபர் சுமார் 5 அடி 8 அங்குல உயரமுள்ள ஒரு மனிதர் என்றும், சட்டை அணியாத, குட்டையான கூந்தல் கொண்ட, ஒழுங்கற்ற மற்றும் அழுக்கான, 30 முதல் 35 வயதுக்குட்பட்ட ஒரு ஒல்லியான மனிதர் என்றும் வைத்தியர் கூறியுள்ளார்.

வைத்தியர் பொலிஸில் அளித்த முறைப்பாடு தொடர்பாக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பி அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

பாலியல் வன்கொடுமைக்கு முன், சந்தேக நபர் அறையின் கதவை மூடிவிட்டு, விளக்குகளை ஔிரச் செய்து, சுற்றுப்புறங்களைச் சரிபார்த்து, பின்னர் குளியலறையில் மட்டும் விளக்குகளை ஔிரச் செய்துள்ளார்.

“நான் இராணுவத்திலிருந்து தப்பியுள்ளேன்.பொலிஸ் என்னைத் தேடுகிறது. கொஞ்ச நேரம் இருந்துட்டு அப்புறம் போயிடுவேன். உன்னை எதுவும் செய்ய மாட்டேன். சத்தம் போடாதே. நீ சத்தம் போட்டால் உன் கழுத்தை அறுத்துடுவேன். அது எனக்குப் பெரிய பிரச்சனை இல்ல.” என குறித்த நபர் கூறியதாக வைத்தியர் தனது சுய வாக்குமூலத்தில் கூறியதாக பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

பின்னர் சந்தேக நபர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து, கட்டிப்போட்டு விட்டுச் சென்றதாகவும், பின்னர் தானே முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டு, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று தான் பணிபுரிந்த வார்டில் உள்ள வைத்தியரிடம் சம்பவம் குறித்து தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பின்னர், தனது தந்தைக்கும், சம்மாந்துறை வைத்தியசாலையில் பணிபுரியும் தனது நெருங்கிய நண்பருக்கும், குறித்த வைத்தியரின் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றத்தைச் செய்த நபரை மீண்டும் பார்த்தால் அடையாளம் காண முடியும் என்றும் அவள் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு, அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, இந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

சந்தேகத்திற்குரிய முன்னாள் இராணுவ வீரரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரித்து, பின்னர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய, அநுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்தக் குற்றத்தின் பிரதான சந்தேக நபரான கல்னேவ புதிய நகரப் பகுதியைச் சேர்ந்த நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற 34 வயதுடைய நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

சந்தேக நபர் நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​பொலிஸாரால் தான் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவர் நீதவானிடம் தெரிவித்துள்ளார்.C

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here