எதிர்வரும் மேமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்காக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 2 அரசியல் கட்சிகளதும் 2 சுயேட்சை குழுக்களினதுமாக 4 வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான அ.உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
இன்று மாலை வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாற தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் கடந்த 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று பிற்பகல் 12 மணியளவில் நிறைவுக்கு வந்திருந்தது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயாதீனகுழுக்கள் மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 10 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்ததோடு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 7 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மேலும் துணுக்காய் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புனு தாக்கல் செய்ததோடு, மாந்தைகிழக்கு பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக 6 ஆறு கட்சிகளும் 2 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இதில் மொத்தமாக 38 அணிகள் வேட்புமனு தாக்கல் செய்ததுடன் 34 அணிகளின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
4 அணிகளின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன. இதில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் 2 சுயேட்சைக் குழுக்களினதும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் போட்டியிடும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. பொதுஜன ஐக்கிய பெரமுன கட்சி, ஸ்ரீலங்கா மகஜன பக்சய ஆகிய கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.