நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு அனைத்து அரசில் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரயத்தனைங்களை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் போரதீவுப்பற்று உள்ளூராட்சி மன்றத்திற்கு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அரசியல் கட்சி ஒன்று மிகவும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தது.
இந்நிலையில் அப்பிரதேசத்திலுள்ள வட்டாரம் ஒன்றில் போட்டியிடுவதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை அரசியற்கட்சி ஒன்று கட்டாயத்தின் பெயரில் அவர்களுடைய வாகனத்தில் ஏற்றிக் கொண்டு விண்ணப்பத்தில் கையொப்பம் இடுவதற்காக களுவாஞ்சிகுடிப் பகுதியில் அமைந்துள்ள அக்கட்சிக் காரியாலயத்திற்கு புதன்கிழமை (19) சென்றுள்ளனர்.
குறித்த நபரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகன சாரதி அக்காரியாலயத்தின் முன்னால் அமைந்துள்ள வீதியில் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே செல்லுங்கள் என குறித்த நபரிடம் கூறியுள்ளார். ஆனாலும் அந்த நபர் நான் உள்ளே சென்று கையொப்பம் இடுகின்றேன் எனக் கூறிவிட்டு அருகிலிருந்த பற்றைக் காடுகள் ஊடாக தப்பி ஓடிய கால்நடையாகவே நடந்து போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிற்குச் சென்று சேர்ந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
அரசியல் கட்சி ஒன்றின் வாகனத்தில் சென்ற நீங்கள் ஏன் நடந்து வருகின்றீர்கள் என அவரது வீட்டிலுள்ளோரும், கிராமத்தவர்களும் அவரிடம் வினவியுள்ளனர். “எனக்கு அரசியல் சரிவராது என்னால் முடியாது, முடியாது, என தெரிவித்திருந்தும் என்னை கட்டாயத்தின் பெயரிலேயே ஏற்றிக் கொண்டு சென்றனர். நான் அவர்களின் தேர்தல் பிடியிலிருந்து அவர்களுக்குத் தெரியாமலேயே தப்பிப் பிழைத்து கடந்து வந்துவிட்டேன்” என பதிலளித்துள்ளார்.
இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் அரசியற் கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் மிகவும் பிரயத்தனத்திற்கு மத்தியிலேயே தான் அனுபவமில்லாதவர்களையும், கல்வியறிவு குறைந்தவர்களையுமே களமிறக்கியுள்ளதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.