அண்மையில் மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேசத்தில் மாடுகளை திருடிய இளைஞன் பொதுமக்களால் மடக்கிப் பிடித்து தாக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) அதிகாலை அந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 15ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புதுமண்டபத்தடி பிரதேசத்தில் மாட்டினை திருடியபோது இந்த இளைஞனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தாக்கி, அந்த நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது.
அதையடுத்து, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சந்தேக நபரை சிறைச்சாலை நிர்வாகம் பொறுப்பேற்று, அவருக்கு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, நேற்று அதிகாலை 1 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், உயிரிழந்தவர் பற்றி இதுவரை அறியப்படவில்லை எனவும் அவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.