யாழ் கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள வாய்க்காலில் கடந்த 26ஆம் திகதி நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்படாமல் இருந்தது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு – ஒட்டிசுட்டான் வித்திராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், ஒரு மகன் அதிபராகவும் கடமை புரிகின்றார்.
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் பிறந்த இவர் கடந்த மார்ச் 12ஆம் திகதி ஒட்டிசுட்டானில் உள்ள வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் இருபாலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இவர் மது அருந்துவதற்காக யாசகம் பெற்று வந்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் மது போதையில் குறித்த வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
கழுத்து எலும்பில் ஏற்பட்ட உடைவு காரணமாகவே மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.