டொமினிகன் குடியரசின் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 113 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சாண்டோ டொமினிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 1,000 பேர் வரையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை வரை இசைநிகழ்ச்சி நீடித்துள்ள நிலையில், இசைநிகழ்ச்சி நடைபெற்ற கேளிக்கை விடுதியின் மேற்கூரை சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 113 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.