காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிரிழந்த சம்பவம் புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 18 ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய காதலியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
உயிரிழந்த காதலியும் சந்தேக நபரான காதலனும் ஒரு வருடத்துக்கும் அதிக காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த காதலி சந்தேக நபருடனான காதல் உறவை முறித்து கொள்ள முயன்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த காதலன் சம்பவ தினத்தன்று, காதலியின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
தகராறின் போது சந்தேக நபரான காதலன் தனது காதலியை கத்தியால் குத்தியுள்ளார். படுகாயமடைந்த காதலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபரான காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம், மாரவில பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய காதலனே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.