பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

0
9

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“கணினி குற்றத் தலைமையகம்” (Computer Crime Headquarters) எனக் குறிப்பிட்டு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயரையும், போலியாக தயாரிக்கப்பட்ட கையொப்பத்தையும் உள்ளடக்கி, ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்ட கடிதம் ஒன்று, தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் எவையும் சட்டப்பூர்வ அடிப்படையற்றவை எனவும், ஒன்றுக்கொன்று பொருந்தாத வார்த்தைகளைப் பயன்படுத்தி, இலங்கை தேசிய இலட்சினை, இலங்கை உயர் நீதிமன்ற இலட்சினை மற்றும் இலங்கை பொலிஸ் அதிகாரப்பூர்வ இலட்சினைக்கு ஒத்தவாறு இலட்சினைகள் அச்சிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.

இந்த கடிதம் அனுப்பப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட “Cyber Crime Headquarters Colombo, Sri Lanka” என்ற பெயரில் இலங்கையில் எந்தவொரு நிறுவனமும் இல்லை எனவும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகள் அல்லது விடயங்கள் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்படாத, தவறான மற்றும் திரிக்கப்பட்ட தகவல்கள் எனவும் இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இது திட்டமிட்டு, மிகவும் திட்டமிடப்பட்ட முறையில், இலங்கை பொலிஸாரை அவமதிப்பதற்கும், பொதுமக்களை தவறாக வழிநடத்துவதற்கும் உருவாக்கப்பட்ட கடிதம் என அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.