மட்டக்களப்பு – கரடியனாறு பகுதியில் கடை ஒன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க 6 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை (29) இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதாக அப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரடியனாறு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவுக் கடை ஒன்றை அமைப்பது தொடர்பாக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் அனுமதி கேட்டபோது, அவர் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபா பணத்தை வழங்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த நபர் கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து, ஆணைக்குழுவினது அதிகாரிகளின் வழிகாட்டலில் இன்று (29) நண்பகல் 12 மணியளவில் கரடியனாறு பகுதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினர் மாறுவேடம் தரித்து, வீதியில் கண்காணிப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வேளை, அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை வாங்கியபோது, அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து பொது சுகாதார பரிசோதகரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 54 வயது நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.