நிதியமைச்சு கீழ் பதிவுசெய்யப்பட்ட 257 வாகனங்களில் 176 வாகனங்கள் மாயமாகியுள்ளமை தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான தரவுகளின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட 176 வாகனங்கள் தற்போது எங்கே உள்ளன என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளமுடியவில்லை என தேசிய சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு இவற்றில் 99 வாகனங்கள் தொடர்பில் எவ்வித விபரங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இவ்வாறு மாயமாகியுள்ள 176 வாகனங்கள் தற்போது எங்கே உள்ளன என்பதைக் கண்டறிவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பிரதம கணக்காய்வு அதிகாரியினால் கணக்காய்வாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிதியமைச்சு அதன்கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களின் உரித்தையும், அவ்வாகனங்கள் பௌதிக ரீதியில் தம்மிடம் உள்ளமையையும் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.