ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டார்.
தலா ரூ.100,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி, சந்தேக நபருக்கு பயணத் தடையையும் விதித்தார்.
மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அநாகரீகமான முறையில் நடந்துகொண்டமைக்காக விமான நிலைய பொலிஸாரால் புதன்கிழமை (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பயணி அதிக மதுபோதையில், சக பயணிகளிடம் மோசமாக நடந்துகொண்டதுடன், விமான பணிப்பெண்களிடமும் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
65 வயதான குறித்த நபர், யாழ்ப்பாணம் – நயினாதீவு பகுதியை சொந்த இடமாக கொண்ட ஸ்வீடன் நாட்டில் வசிப்பவராவார். இவர் இரட்டை குடியுரிமை பெற்றுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக, விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய பொலிஸாருடன் சேர்ந்து குறித்த பயணியைக் கைது செய்தனர்.
மேலும், பயணியை மருத்துவப் பரிசோதனைக்காக பரிந்துரைத்த போது அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.