நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டிய சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (18) மதியம் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்குரிய மேஜர் விடுமுறைக்காக நுவரெலியா பகுதிக்கு வந்து, குடி போதையில் விழுந்து கிடந்த நிலையில் காயமடைந்துள்ளதுடன் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன் போது வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தன்னை அவமரியாதையாக பேசினார் என கூறிய மேஜர், அரை நிர்வாணமாக, அநாகரீகமான முறையில் நடந்துக்கொண்டு வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரத்னவினால் நுவரெலியா பொலிஸாருக்கு அளித்த முறைப்பாட்டுக்கமைய, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.