மெகசின் சிறையில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது நடந்த தாக்குதலில் காயமடைந்த ஒரு கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த தாக்குதல் தொடர்பாக சிறை அதிகாரிகள் இருவர் மற்றும் மேலும் இரண்டு கைதிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 23ஆம் திகதி மஹரகம பொலிஸாரால் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 54 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான ஹேவாதீர தொன் கெமுனுஜித் என்பவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கொழும்பு மெகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரிடம் ஐஸ் போதைப்பொருள் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், கடந்த 26ஆம் திகதி இரண்டு சிறை அதிகாரிகள் அவரை சோதனை செய்ய முயற்சித்தனர்.
அப்போது, அவர் அந்த ஐஸ் போதைப்பொருளை விழுங்கியதை அடுத்து, அந்த இரண்டு அதிகாரிகள் மேலும் இரண்டு கைதிகளுடன் இணைந்து அவரை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பலத்த காயமடைந்த அந்த கைதி, சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த கைதி, கடந்த 16ஆம் திகதி பிற்பகல் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரள்ளை பொலிஸாரின் விசாரணைகளில், சிறையில் உள்ள மற்ற கைதிகளும், அந்த கைதி ஐஸ் போதைப்பொருளை விழுங்கிய பின்னர், இரண்டு சிறை அதிகாரிகள் மேலும் இரண்டு கைதிகளுடன் இணைந்து அவரை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி, வாந்தி எடுக்க வைப்பதற்காக உப்பு கலந்த நீர் போத்தல்கள் இரண்டை அருந்த வைத்ததாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த மெகசின் சிறைச்சாலை, கொழும்பு மேலதிக நீதவான் சம்பத் ஜயவர்தனவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.